புதன், 22 மே, 2013

புதிய கல்வி ஆண்டில் படிப்பது எப்படி? மனம் திறக்கும் மாணவர்கள் Dinamalar News

புதிய கல்வி ஆண்டில் படிப்பது எப்படி? மனம் திறக்கும் மாணவர்கள்மே 23,2013,09:38 IST

எழுத்தின் அளவு :
சென்னை: கோடை விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து, மீண்டும் பள்ளிப் படிகளில் காலடி பதிக்க காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும், இந்தாண்டும் பல கனவுகள், லட்சியத்துடன் படிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, "அரசு பொது தேர்வுகள்" என்ற கூடுதல் பொறுப்பும் காத்திருக்கிறது. மாணவர்கள் திறமைக்கு மதிப்பெண் ஒரு அளவுகோல் இல்லை என்றாலும், மதிப்பெண்ணே உயர்கல்விக்கு வழிகாட்டுகிறது. மாணவர்கள் விரும்பும் வகையில் பள்ளிச் சூழல் அமைந்துவிட்டால், படிப்பும் விருப்பம்போல் அமைந்துவிடும்.
வரும் கல்வி ஆண்டில், பள்ளிக்காலங்கள் எப்படி அமைய வேண்டும் என்ற மாணவர்கள் எதிர்பார்ப்பு இதோ...
கே.பி.ஹரிஷ்குமார் (பத்தாம் வகுப்பு, சவுராஷ்டிரா பள்ளி, மதுரை): பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் கூடுதல் பொறுப்பு மற்றும் கவனத்துடன் இருக்க முடிவு செய்துள்ளேன். பயனுள்ள தகவல்களை தவிர, தொலைக்காட்சியில் வரும் திரைப்படம், பொழுது போக்கு அம்சங்களை ஓராண்டு தியாகம் செய்யவுள்ளேன்.
இதே தியாகத்தை எனது பெற்றோரிடமும் எதிர்பார்க்கிறேன். தெரியாமல் தவறு செய்யும் மாணவர்களை, ஆசிரியர்கள் அன்புடன் திருத்த வேண்டும். கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்கும் சூழலை எதிர்பார்க்கிறேன்.
ஜெ.கல்யாணராமன் (பிளஸ் 2, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி,மதுரை): ஆசிரியர்கள், பாடத்தை தெளிவாக புரியும் படியும், படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் நடத்த வேண்டும். ஆசிரியரோ, பெற்றோரோ மற்ற மாணவர்களுடன் எங்களை ஒப்பிட்டுக் கூறாமல், எங்களின் திறமைக்கேற்ப தனித்தன்மையுடன் சாதிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
என்னிடம் உழைப்பு இருந்தாலும், அதை மெருகேற்ற பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தேவை. என்னிடம் உள்ள தவறுகளை மற்றவர்களுக்கு முன்னால் சுட்டி காட்டாமல், தனியாக எடுத்துக் கூறி திருத்த வேண்டும். ஒவ்வொரு பொழுதையும் படிப்பிற்காக அர்ப்பணிக்க வேண்டும், நல்ல நண்பர்களோடு பழகி, படிப்பு பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
எஸ்.ஷர்மி, (பிளஸ் 2, எஸ்.எம்.பி.எம்., மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்): தினமும் நடத்தும் பாடங்களை, அன்றே படிக்கவேண்டும். படிப்பதற்கு குடும்பத்தினரும் ஊக்கம் தரவேண்டும். தினமும் காலை 5 முதல் 6.30 மணி வரையும், இரவு 6 முதல் 10 மணி வரையும் படிக்க முடிவு செய்துள்ளேன்.
ஆசிரியர்கள் மாணவர்களை, தங்கள் நண்பர்களாக கருத வேண்டும். எங்களின் சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் அக்கறையுடன் பதில் தர வேண்டும்.
என்.சூரஜ் குமார் (பத்தாம் வகுப்பு, நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி, தேனி): முதல் நாள் நடத்திய பாடத்தில் இருந்து, மாணவர்களிடம் கேள்வி கேட்டு தெளிவு படுத்திய பிறகு தான், அடுத்த பாடத்திற்கு ஆசிரியர் செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை தேர்வு வைத்து,மேலும் சிறப்பாக படிப்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நன்கு படிக்கும் மாணவர்களிடம் பழகுவேன், விவாதிப்பேன். அதிகாலை படிப்பு, ஆரோக்கியமான உணவு, நல்ல சேர்க்கை, கடின உழைப்பு இவை நல்ல மதிப்பெண் தரும்.
எம்.பவித்ரா (பிளஸ் 2, நேஷனல் அகாடமி, ராமநாதபுரம்): பாடங்களை டிசம்பர் மாதத்திற்குள் படித்து, அதன்பிறகு, திருப்புதலுக்காக படிக்க வேண்டும். மாதிரி தேர்வு அதிகமாக எழுத வேண்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம்.
எனவே, பாடத்தை குழப்பமின்றி தெளிவாக கற்பிக்க வேண்டும். அப்போது தான் மனதில் பதியும். படிப்பிற்கு உதவும் வகையில் நண்பர்கள், பாடங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும்.
எம்.கே.சந்தோஷ் (பத்தாம் வகுப்பு, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி சிவகங்கை): தினமும் காலை 4.30 முதல் 6.30, மாலை 6 - இரவு 11 மணி வரை திட்டமிட்டு படிப்பேன். ஆசிரியர்கள் நடத்தும் போதே, நன்கு கவனித்தால், பாடம் மனதில் நிற்கும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், வகுப்பிற்கு தயாராக வரவேண்டும். பாடம் எடுக்கும்போதே, ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாணவர்களிடம், ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.
எம்.சோனியா (பிளஸ் 2, சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்): ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் நிறைகுறையை கண்டறிந்து, புரியும்படி கற்பிக்க வேண்டும்.
மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் ஆசிரியர் தான். பொதுத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது தேவையற்றது. அன்றைய பாடங்களை அன்றே படித்தால் போதுமானது. தினமும் காலை 5 முதல் 7 மணி, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை படிக்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை Dinamalar News

ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லைமே 23,2013,09:43 IST



சிவகங்கை: கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஜூனில் பள்ளி திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கி, பள்ளி திறக்கும் போது, ஆசிரியர்கள் காலிபணியிடம் இன்றி இருக்க, கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இம் மாதம் முழுவதும், அந்தந்த மாவட்டங்களில், இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது.
முதற்கட்டமாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் முடிந்தது. தொடர்ந்து முதுகலை ஆசிரியர், பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே 30 வரை நடக்கிறது.
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், எந்தவித முறைகேட்டிற்கும் இடமின்றி செயல்பட கல்வித்துறைக்கு அரசு கடுமையான உத்தரவு பிறப்பித்ததால், மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விபரங்கள், பதிவு மூப்பு போன்றவற்றை, அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்கள் மூலம், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அங்கு, மாநில அளவில் பதிவு மூப்பு ஆசிரியர்கள் பட்டியலை தயாரித்து, "ஆன்-லைனில்" வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கி, உத்தரவுகள் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மகிழ்ச்சி: கடந்த ஆண்டு வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஆசிரியர் காலிபணியிடங்கள் ஒதுக்கி, இடமாறுதல் வழங்கப்படும். இதில், எம்- லிஸ்ட் எனக்கூறும், அமைச்சர்கள் பரிந்துரைக்கும், நகர்புற பள்ளிகளை மறைத்து,
காலியிடம் வெளியிடப்படும்.
இவ்வாண்டு, "ஆன்-லைனில்" ஆசிரியர்களே நேரடியாக விபரத்தை பதிந்து, மாநில பதிவு மூப்பு படி, எங்களது நேரடி பார்வையில் இடங்களை தேர்வு செய்கிறோம். இதில், முறைகேட்டிற்கு வழியில்லை.
பிற மாவட்ட மாறுதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை நாங்கள், ஒரே இடத்தில் ஆன்-லைனில் தேர்வு செய்கிறோம். இந்த நேர்மையான கவுன்சிலிங் பணியிடமாறுதலால், மகிழ்ச்சி அடைகிறோம் என, தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

குஜராத்தில் கல்விப் புரட்சி | Kalvimalar - News
கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.
மோடியின் அரசு, ‘ஷாலா பிரவேஷ் மகோத்சவ்’ என்ற திருவிழாவை நடத்தி வருகிறது. இது பள்ளிக்கூடங்கள் திறக்கும் முதல் நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுவதாகும். இந்தத் திருவிழாவின் நோக்கம் என்னவென்றால், பள்ளியில் சேரும் வயது நிரம்பிய அனைத்துக் குழந்தைகளையும் தேடிப்பிடித்துப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது.
அதேபோல் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளையும் கண்டுபிடித்து அவர்களை அந்தந்த வகுப்புகளில் சேர்த்து படிப்பைத் தொடரச்செய்வது ஆகும். இத்திருவிழாவில் கல்வித்துறையினர் மட்டுமல்ல, அரசுத் தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் ஈடுபடுகின்றனர். முதல்வர் நரேந்திர மோடியும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் இந்தத் திருவிழாவில் பங்கேற்கிறார்.
பெண் கல்வி: அனைத்துப் பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக ‘கன்யா கேலவாணி’ என்னும் இயக்கம் 2003ல் ஆரம்பிக்கப்பட்டது. மக்களைப் பார்த்து நரேந்திர மோடி, ‘நான் உங்களிடம் கேட்கும் பிச்சை ஒன்றே ஒன்றுதான். உங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்கள்’ என்றார். அதோடு அவர் நின்றுவிடவில்லை.
ஒவ்வோர் ஆண்டும், பள்ளிக்கூடம் திறக்கும்போது நரேந்திர மோடியே நேரில் சென்று பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வலியுறுத்துகிறார். இதற்காக அவர் ஆண்டுக்கு ஆறு நாட்களை ஒதுக்குகிறார்.
பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக, கன்யா கேலவாணி ரதம் ஒன்று கிராமம் கிராமமாகச் செல்கிறது. இது பெண் கல்வியின் அவசியத்தை உணர வைக்கிறது. மோடியின் அதிரடி உத்தரவின்மூலம் மாநிலம் முழுதும், பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்பட்டன.
வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள பெண் குழந்தைகள் பள்ளியில் சேரும்போதே அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போடப்படுகிறது. எட்டாம் வகுப்பை முடித்தவுடன், அல்லது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் அந்த மாணவிக்கு வட்டியுடன் சேர்த்துப் பணம் வழங்கப்படுகிறது.
பெண் கல்வித் திட்டத்துக்காகவே சிறப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடிக்கு முதல்வர் என்ற முறையில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணமும் இந்தப் பெண் கல்வித் திட்ட நிதியில் முழுவதுமாகச் சேர்க்கப்படுகிறது.
குஜராத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை ஒரு குழந்தை எட்டிவிட்டால், அந்தக் குழந்தையைக் கட்டாயம் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். தப்பவே முடியாது. இடையில் நின்றாலும் விடுவதில்லை.
மருத்துவப் பரிசோதனை: குஜராத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஓர் இயக்கமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரம், பள்ளிக்கூட சுகாதார வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது மாநிலம் முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் நாள், ‘சுத்தமாக இருப்பது எப்படி’ என்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரண்டாம் நாள், அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. மூன்றாம் நாள் சத்தான உணவு பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
மாணவ, மாணவிகளுக்கான சமையல் போட்டி முக்கியமானது ஆகும். இதன்மூலம் பள்ளியில் படிக்கும்போதே அவர்கள் நன்கு சமைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. அதோடு, அந்தப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு எப்படிச் சத்தான உணவைச் சமைப்பது என்பதும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
நான்காம் நாள், மேம்பட்ட சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஐந்தாம் நாள், அதாவது இறுதி நாள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தச் சுகாதார வார நிகழ்ந்ச்சியில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிக்கு வர முடியாத அப்பகுதிச் சிறுவர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களும் பயன் அடைவது இந்தத் திட்டத்தின் சிறப்பு ஆகும்.
மக்களின் பங்களிப்பு: அரசுப் பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து, தனியார் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வோர் முன்வைக்கும் ஒரே வாதம், தரம். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ‘குணோத்சவ்’ என்ற இயக்கத்தை 2009ல் தொடங்கினார் மோடி. மோடி, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 3000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோர் இதில் அங்கத்தினர். இவர்கள் குஜராத்தில் உள்ள மொத்தம் 32,274 தொடக்கப் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய ஆண்டுதோறும் மூன்று நாட்களைச் செலவிடுகின்றனர்.
இந்த ஆய்வின்போது, மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன், அடிப்படை அறிவியல், கணிதத் திறன் போன்றவை கவனிக்கப்படுகின்றன. இதன்மூலம் அப்பள்ளியின் தரம் மதிப்பிடப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுகின்றன.
இந்த இயக்கம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது, இதில் இன்னும் மேம்படுத்தவேண்டியது ஏதேனும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளும் பணியை ஒரு மூன்றாம் அமைப்பிடம் கொடுத்துள்ளனர். அவர்களும் இந்த இயக்கத்தின் போக்கைக் கண்காணித்து, தேவையான பரிந்துரைகளை வழங்கிவருகின்றனர்.
2001-ம் ஆண்டு குஜராத்தில் 11 பல்கலைக்கழகங்களே இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டில் 41 பல்கலைக்கழகங்களாக இது உயர்ந்து நிற்கிறது.ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணத்துக்கு, குழந்தைகள் பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொள்வோம். இந்தப் பல்கலைக்கழகத்தில், குழந்தை பிறப்புமுதல் அதனை ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு அதனை வளர்க்கவேண்டும் என்பது தொடர்பான விரிவான படிப்புகளைச் சொல்லிக்கொடுக்கின்றனர். பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதை 2009-ம் ஆண்டு நரேந்திர மோடி தொடங்கினார். இந்தியாவில் குழந்தைகளுக்கான பல்கலைக்கழகம் இது ஒன்றுதான் உள்ளது. உலக அளவில் மொத்தம் 4 பல்கலைகழகங்கள்தாம் உள்ளன. அதில் இதுவும் ஒன்று.
உலகம் முழுவதும், பெட்ரோல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்குக் கடும் கிராக்கி உள்ளது. இத்தகைய படிப்பின் அவசியத்தையும் வேலை வாய்ப்பையும் புரிந்துகொண்ட நரேந்திர மோடி, ‘தீனதயாள் உபாத்தியாயா பெட்ரோலியப் பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை காந்திநகரில் தொடங்கியுள்ளார். இங்கு பெட்ரோலியம் தொடர்பான அனைத்துப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.
ஐ.டி.ஐ. மாணவர்கள்: முன்பெல்லாம் குஜராத்தில் ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தகுதி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களைவிடக் குறைவாகவே கணக்கிடப்பட்டது.
அதாவது ஐ.டி.ஐ படிப்பதற்கு அடிப்படைக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்புத் தேர்ச்சியே, அவர்களின் கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் 12-ம் வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அரசு வேலைக்கான தேர்வுகளை ஐ.டி.ஐ முடித்த மாணவர்கள் எழுத முடியாத நிலை இருந்தது.
10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ இரண்டு ஆண்டுகள் படித்தும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையாக இல்லாத நிலையை உணர்ந்த நரேந்திர மோடி, ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதற்காக புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
இதன் மூலம், ஐ.டி.ஐ முடித்த மாணவர்களுக்குத் தொழில் சார்ந்த வேலைவாய்ப்பும் கிடைக்கும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதும் அரசு தேர்வுகளை எழுதி அதன்மூலமும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேலாண்மைக் கல்வி நிறுவனம்: அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் போக மற்றுமொரு உலகத் தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மோடி விரும்பினார். குஜராத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். இதனால் ‘ஐ கிரியேட்’ என்ற புதிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை, குஜராத் தலைநகர் காந்திநகரில் ஏற்படுத்தினார்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இந்தக் கல்வி நிறுவனத்தின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை உருவாக்க 150 கோடி ரூபாயை குஜராத் அரசு ஒதுக்கியது என்றால், இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தக் கல்வி நிறுவனத்தின் முக்கியப் பணி, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துவது ஆகும்.
மனிதவளத்தில் பெருமளவு பின்தங்கியிருந்த குஜராத்தை மோடியின் பல்வேறு செயல்திட்டங்கள் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளன. இனி வரும் ஆண்டுகளில் குஜராத் மனிதவளத்திலும் பெருமளவு முன்னேறும் என்பது தெளிவு.